நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வியாழன், 6 அக்டோபர், 2016

‘தவளை ராசா’


ஓரு ஊரிலே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் ஒரு நாள் பூங்காவில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது பந்து குளத்தினுள் சென்று விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக அவள் குளத்தினுள் இறங்கினாள். குளத்தினுள் இருந்த ஒரு குகையில் ஒரு தவளை இருந்தது. அது, ‘ஏய்……… ராஐகுமாரியே! நீருள் இறங்காதே. என்னை நீ அரண்மனைக்குள் அழைத்துச் செல்வாயானால் நான் பந்தை எடுத்துத்தருவேன்’ என்றது. அதைக் கேட்டு பயந்தாளானாலும் பந்தை எடுக்க வேண்டும் என்பதற்காகச் சம்மதித்துவிட்டுப் பந்தை எடுத்ததும் தவளையைத் திரும்பிப் பாராமல் ஓடிவிடுகிறாள். தவளை பலமுறை கத்தியும் அவள் செவிசாய்கவில்லை.

ஆனால் தவளை நீருக்கு வெளியே வந்து ராஐகுமாரி சென்ற வழியைப் பின்பற்றிச் சென்று அரண்மனையின் வாயில் கதவைத் தட்டியது. தவளையிடம் விசாரித்த காவலரிடம் , ‘ராஐகுமாரி வரச்சொன்னாள் அதனால் தான் வந்தேன்’ என்றது. இதனை ராஐகுமாரியிடம் காவலர் தெரிவித்ததும் அவள் பயந்து தந்தையிடம் சென்று கூறினாள். தந்தை, ‘இந்தச் சிறிய பிராணிக்கா பயப்படுகிறாய்? போய் அது கேட்டதைச் செய்துகொடு’ என்று கூறிவிட்டார்.

ராஐகுமாரியும் ஒரு வழியும் இல்லாமல் தவளையைத் தன் அறைக்கு வரவழைத்தாள். அது ராஐகுமாரிக்குச் சமானமாகத் தட்டில் சாப்பாடு கெண்டுவருமாறு அழைப்பித்துச் சாப்பிட்டது. அது கேட்பவற்றையெல்லாம் அரசகுமாரி அருவருப்பு ஏற்பட்டாலும் அதனைத் தட்டிக் கழிக்க முடியாது செய்து கொடுத்தாள். கடைசியாகத் தவளை, ‘எனக்குக் களைப்பாக இருக்கிறது. படுக்கப்போகின்றேன். உன் கட்டிலைத் தட்டிப்போடு. என்னை தூக்கி அதில் விட்டுவிட்டுக் கதவைச் சாத்திவிட்டு வா…………’. என்று கட்டளை பிறப்பித்தது. அரச குமாரியும் தவளையின் ஆணைகளுக்கு எல்லாம் பணிந்தாள்.

தவளையைக் கட்டிலில் விட்டுக் கதவைச் சாத்திவைத்து விட்டு வந்த ராஐகுமாரி திடுக்குற்றாள். அங்கு தவளையைக் காணவில்லை. பதிலாகக் கட்டிலில் அழகிய ராஐகுமாரன் ஒருவன் படுத்திருக்கக் கண்டாள். பின் கதவைத் திறந்து கொண்டு தந்தையிடம் ஓடிச் சென்று நடந்தவைகளைக் கூறினாள்.

இதற்கிடையில் ராஐகுமாரனும் வந்து அரசனை வணங்கித் “தான் ஒரு ராஐகுமாரனாக இருந்தான் என்றும், ஒரு முனிவரின் சாபத்தால் இவ்வாறு தவளையாய் மாறினேன் என்றும், யாராவது ஒரு ராஐகுமாரி தீண்டப்பெறின் உனது சுய உருவை மீளப்பெறுவாய் எனும் சாபவிமோசனத்தால் இன்று இவ்வதிசயம் நடந்தது” என்றும் கூறிநின்றான். அவனது அழகையும் நற்குணங்களையும் கண்ட அரசன் தன் மகளை அவனுக்கே மணம் முடித்து வைத்தான்.