நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

திங்கள், 26 டிசம்பர், 2022

ஓய்வு

ஓய்வு...
பணி ஓய்வுப் பெறுகிறார் இன்று
என் பக்கத்து அலுவலகத்தில் ஒருவர்...

பிரிவு உபச்சார விழா மேடையில்
பெரியதொரு மாலை அணிந்தபடி
சிறியதொரு புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் அவர்...

"பம்பரமாய்ச் சுழன்று உழைத்த
நம்பிக்கைக்குரிய உழைப்பாளி"
போன்ற சம்பிரதாய வார்த்தைகளால்
வந்திருந்தவர்கள் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்
அந்த அம்பத்தியெட்டு வயது மனிதரை...

"இவர் கால் வைத்த பின்பு தான்
வேர் விட்டு வளர்ந்தது இந்த அலுவலகம்" என்று...

சால்வை அணிவித்துக் கொண்டே
சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்
சஃபாரி அணிந்திருந்த அந்த
உயரதிகாரி...

சிறு சிறு தவறுகளுக்காக
சிடு சிடுவென எரிந்து விழுந்த
அதே மேலதிகாரி தான் சிரித்தபடி இன்று அவரைச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்...

இன்னும் சில நிமிடங்களில்
இனிதே நிறைவுற்றுவிடும் விழா...

கழுத்தில் அணிந்த மாலையின் பாரம்
அதைக் கழற்றியவுடன் காணாமல் போய்விடும்...

ஆனால் மனதில் தொற்றிக் கொண்ட 
ஒரு பாரம் இனி மெளனமாகத் தொடரும்...

அனுதினம் அவரைச் சுமந்த நாற்காலி
இனி அடுத்து ஒருவரைச் சுமக்க ஆயத்தமாகி இருக்கும்...

அவர் தலைக்கு மேல் சுழன்ற மின்விசிறி
இனி வேறொருவரின் வியர்வையை உலர்த்த தயாராகி இருக்கும்...

கோப்புகளே கதி என்றிருந்தவரை
மூப்பு வந்து முழுதாய் விடுவித்திருக்கிறது...

நேற்று வரை பேனா பிடித்த கரத்தில்
இன்று வெறுமை புகுந்து
விரல் பிடித்திருக்கிறது...

வாசலில் அமர்ந்திருக்கும் அந்தக் காவலாளியிடம் 
"நாளை பார்க்கலாம்" 
என்று நாள்தோறும் 
சொல்லிச் செல்லும் வழக்கம்
இனி வாய்க்கப் போவதில்லை அவருக்கு...

மாலை நேரத்தில் தேநீர் கொண்டுவரும் பையனிடம் ஆறிப் போன தேநீருக்காக
அலுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இனி இருக்கப் போவதில்லை அவருக்கு...

அலறும் அலாரச் சத்தம் ஏதுமின்றி
இனி அமைதியாகவே விடியப் போகின்றன அவரது அதிகாலைகள்...

இதுநாள் வரை இயந்திர கதியில் புரட்டப்பட்ட செய்தித்தாள்களில்
இனி இரங்கல் செய்திகள் கூட
இருமுறை வாசிக்கப்படும்...

"அப்பா... ஆபீஸ் போற வழியில
என்ன பஸ் ஸ்டாப் இல் இறக்கி விட்ருங்க"

"ஏங்க டிபன் பாக்சுல
தயிர் சாதம் வச்சிருக்கேன்,
மதியம் திறக்கும் போது 
பார்த்துத் திறங்க"

"வேலை முடிய லேட் ஆச்சுன்னா
கால் பண்ணுங்க"

இப்படியான உரையாடல்கள்
இனி ஒருபோதும் அவர் செவிகளைச் சென்று சேரப் போவதில்லை...

நதியென ஓடிக் கொண்டிருந்த
அவரது பகல் பொழுதுகள்
நத்தையென நகர்வதாக
நித்தம் இனி அவர் உணரக்கூடும்...

இவ்வாறாக நான் எண்ணிக் கொண்டிருக்கையில் இறங்கி நடந்து வருகிறார் என்னை நோக்கி அவர்...

இப்போது கைக்குலுக்கி முடித்து
கடைசியாக நான் அவருக்கு
சொல்ல வேண்டியது
பாராட்டுகளா? அல்லது ஆறுதலா?

எல்லாமே சில காலம் தான்...

கீதை உபசாரத்தில் சொன்னது போல
இதுவும் கடந்துப் போகும் என்பது
மட்டுமல்ல...
எதுவும் கடந்துப் போகும் என்பது தான்
பேருண்மை √