நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

சனி, 29 அக்டோபர், 2022

ஒன்று இன்னொன்றை ஞாபகப்படுத்துவதென்பது இப்படித்தான் நிகழ்கின்றது.



-----------

# The Lunch Box - Movie (Hindi)

"கடிதங்கள் மூலமாகவே பேசிக்கொண்டிருந்த நாம் சந்திக்க முடிவெடுத்து, நீ எனக்காக ரெஸ்டாரண்ட்டில் காத்திருந்த நேற்றைய அதிகாலையில்தான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது இளா. உன்னைப் பார்ப்பதற்காக கிளம்பிக்கொண்டிருந்தபோது பாத்ரூமில் எதையோ மறந்துவைத்திருந்தது நினைவிற்கு வந்து எடுக்கச்சென்றேன். அங்கு என் தாத்தாவின் வாசனையை என்னால் உணரமுடிந்தது. என் தாத்தா உயிரோடு இருந்தபோது, அவர் குளித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் இந்த வாசனை பாத்ரூமில் உலாவும். பல வருடத்திற்குப்பின் நேற்று அந்த வாசனை மீண்டும் எழும்பியது. என் தாத்தாதான் மறுபடியும் வந்துவிட்டாரோ என்று குழம்பியபோதுதான் எனக்கு அது புரிந்தது இளா. அது என் தாத்தாவிலிருந்து அல்ல, என்னிடமிருந்து பரவிய வாசனை, வயது முதிர்ந்தவர்களின் மீது எழும்பும் அதே வாசனை. ஆம், நான் முதியவனாகியிருக்கிறேன் இளா. அந்த அதிகாலையில், அல்லது அதற்கு முந்தைய ஒரு அதிகாலையில்தான் எனக்கு வயதாகிவிட்டிருக்கிறது. வயதான ஒருவனாகத்தான் உன்னை முதன்முதலாக சந்திப்பதற்காக அந்த ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தேன், உன் அருகில், உன் எதிரில் உட்கார நினைத்து முடியாமல், தள்ளிநின்று யாரோ ஒருவனாக வெகுநேரம் உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன். Oh God! நீ அவ்வளவு அழகாக இருந்தாய். அவ்வளவு இளமையாக, இன்னும் கனவுகள் காண்கிறவளாக இருந்தாய். உன் கனவுகளுக்குள் என்னை அனுமதிப்பவளாய் இருந்திருக்கிறாய் இளா, Thank you for that"

---------

# 'அஸீஸ் பே சம்பவம்' - அய்ஃபர் டுன்ஷ்
(தமிழில் சுகுமாரன்)

“எழுந்திருப்பதற்காக நாற்காலியின் கையைப் பற்றியபோது தன்னுடைய கைகளைப் பார்த்தான் அஸீஸ் பே. அவனுடைய கைகள்... அந்தக் கைகள் அவனுடைய அப்பாவின் கைகளைப்போலவே இருந்தன. அவர்களுடைய திருமணத்தின்போது இந்த வீட்டின் அறைக்குள் மகிழ்ச்சியற்ற தோற்றத்துடன் அலைந்து கொண்டிருந்த மனிதன் அவனல்ல, அவனுடைய அப்பா என்பதைத் திடீரென்று உணர்ந்து திடுக்கிட்டான். அதை உணராமலேயே அவன் அப்பாவாக மாறியிருந்தான். அவனுடைய அப்பா தன் மனத்தை மனைவியிடம் வெளிக்காட்டியதில்லை. வீட்டுக்குள்ளே இருப்பதைவிட வீட்டுக்கு வெளியிலிருக்கும் வாழ்க்கைதான் மிகவும் முக்கியமானது என்று பார்த்திருந்தார். அவனுடைய அப்பாவின் முகம் நிரந்தரமாகச் சிடுசிடுத்தது, அவர் குரல் எப்போதும் உரக்கக் கடிந்துகொள்ளத் தயாராக இருந்தது. அவன் தன் முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தான். அதே முன்மண்டை வழுக்கை, முரட்டுத் தோற்றம். கூர்ந்த பார்வை, அவன் கையைச் சிகையருகே கொண்டு வந்தான். கண்ணாடியில் பிரதிபலித்த அந்தக் கையசைவு மறுபடியும் அப்பாவுடையதுதான். முகத்துக்கு நேராக கதவை அறைந்து சாத்தி அவன் விட்டுப்போன அந்த மனிதர் அவனுக்குள்ளே புகுந்திருக்கிறார். வருடக்கணக்காக அங்கேயே மௌனமாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவைப்போன்றே தன் மனைவியும் வாடிய முகத்துடன் வீட்டிற்குள் உலாவுவதை நினைத்துப்பார்த்தான். தன்னால் மன்னிக்க முடியாத அந்த மனிதரின் தொடர்ச்சியாக இருப்பது அவனை வருத்தியது. தவறுகளைச் சரி என்று பராமரிப்பதில் வாழ்க்கையைச் செலவிட்ட ஒருவரின் மலிவான நகல் அவன், ஆம்! அவன் இருமடங்கு சோர்ந்துபோனான்.”

--------

# 'சிறிதளவு இறைச்சி' - ஜாக் லண்டன்
(தமிழில் ராஜேந்திரன்)

அங்கு நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு ஒரே விதிமுறைதான், இளைஞர்கள் முதியவர்களுடன் சண்டையிட வேண்டும். அதாவது அனுபவமுள்ளவர்களும் புதியவர்களும் மோதவேண்டும். டாம்கிங் இளைஞராக இருந்தபோது இதேதான் நடந்திருந்தது. அதாவது அவர், தன்னைவிட முதியவரான ஸ்டவ்ஷரை குத்துச்சண்டையில் தோற்கடித்திருந்தார். தோல்வியடைந்த ஸ்டவ்ஷர், உடைமாற்றும் அறையில் முகம்பொத்தி அழுதுகொண்டிருந்தது இன்னமும் டாம்கிங்கிற்கு நினைவிலிருக்கிறது. இப்போது, முதியவரான டாம்கிங் இளைஞரான சாண்டலுடன் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார்.

”எப்போதுமே இந்தக் குத்துச்சண்டை ஆட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றனர். கயிற்றின் ஊடாகப் பாய்ந்து வந்து அவர்கள் சவால் விடுகின்றனர். அவர்களுடன் மோதும் வயதானவர்கள் எப்போதும் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கின்றனர். வயது முதிர்ந்தவர்களின் உடல் மீதேறி இளைஞர்கள் வெற்றி பெறுகின்றனர். மேலும் மேலும் இளைஞர்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். தடுக்க இயலாதபடி இளமை, தீராத வேட்கையுடன் வயதானவர்களை வீழ்த்துகிறது. பின் அவர்களுக்கும் வயது முதிர்ந்த பின்னர், அதே வீழ்ச்சிக்குரிய சரிவுப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் பின்னேயும் முடிவேயற்று புத்துயிர்ப்போடு இளமை அழுத்தமாக நெருக்கியபடியே முன்னேறுகிறது. புதிய குழந்தைகள் வளர்ந்துத் தாபமுற்று முதிர்ந்தவர்களை புறந்தள்ளுகிறது. அவர்களின் பின்னே மேலும் புதிய குழந்தைகள். இவ்வாறாகக் காலத்தின் இறுதி வரை ஓயாமல் நிகழ்கிறது. வயதான ஸ்டவ்ஷரை வீழ்த்தியது அவர் நினைவுக்கு வந்தது. ரஷ் கட்டர்ஸ் பே என்னுமிடத்தில் பதினெட்டாவது சுற்றில் அவர் வீழ்ந்தார். பின் ஒரு குழந்தையைப் போல மாற்றுடை அணியும் அறையில் அழுது கொண்டிருந்தார். ஒருவேளை அவர் வீட்டுவாடகை செலுத்த வேண்டிய தொகை பாக்கி இருந்திருக்கலாம். ஒருக்கால் வீட்டில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்திருக்கலாம். அநேகமாக சண்டை நடந்த அதே இரவில் சிறிதளவு இறைச்சிக்காகப் பசியோடு ஏங்கியிருக்கவும் கூடும். ஆயினும் ஸ்டவ்ஷர் போட்டியில் பங்கேற்றார். அதன் காரணமாக நம்ப முடியாத தண்டனையைப் பெற்றார். அதே பாதையைத் தானும் கடந்து வந்திருப்பதால் இப்போது தெளிவாகப் புரிகிறது. எனவே ஸ்டவ்ஷர் மாற்றுடை அறையில் அழுததில் வியப்பேதுமில்லை."

-------

வாழ்க்கை தன் வட்டப்பாதையை ஒருபோதும் மாற்றிக்கொள்வதேயில்லை. நமக்கு முந்தையவர்களை நோக்கி நாம் பயணம் செய்யும் அதே வேளையில் தான், நம்முடைய வெற்றிடமும் நிரப்பப்பட்டுக்கொண்டே வருகின்றது. 

ஆம்! இங்கு ஒன்று இன்னொன்றை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.